Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலங்களில் நகைகளை எடுத்துச் செல்ல தனிப்பட்ட விதிமுறைகள் வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கு, மனுதாரர் தரப்பில் திரும்பப்பெறப்பட்டதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரபல நகைக்கடை தங்கமயில் ஜூவல்லரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தேர்தல் காலங்களில் நகைகள் எடுத்துச் செல்லும்போது தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாததால் சிக்கல்கள் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டது. இதனால், நகைகள் எடுத்துச் செல்லும் நடைமுறைகள் குறித்து தெளிவான விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப்பெற விருப்பம் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்த நீதிபதிகள், அந்த விண்ணப்பத்தை சட்டப்படி பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுதந்திரம் இருப்பதாக குறிப்பிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ