மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டப் பணிகளை விரைவில் முடிப்போம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (10.04.2026) சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
மெட்ரோ ரெயில் 2-ம் கட்டத் திட்டப் பணிகளை விரைவில் முடிப்போம் - முதல்வர்  மு.க.ஸ்டாலின்


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (10.04.2026) சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அதாவது சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தனது பயணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கினர்.

அதன்படி அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பயணித்த அவர் டி.எம்.எஸ். ரயில் நிலையம் வரை சென்று பொதுமக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடினார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்…

துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.

அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.

விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!

சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b