Enter your Email Address to subscribe to our newsletters

ஆண்டிபட்டி, 12 ஏப்ரல் (ஹி.ச.)
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசினார்.
அப்போது பல்வேறு அரசியல், சமூக பிரச்சனைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
ஆடு, மாடுகளை வளர்ப்பவர்களுக்கு போதிய மேய்ச்சல் நிலம் இல்லை என்றும், திட்டமிட்டு கால்நடைகள் மேய்வதை அதிகாரத்தில் உள்ளவர்கள் தடுத்து வருகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், மகளிர் உரிமை தொகை தருவோம் என்று கூறுபவர்கள் ஒருபக்கம்; தரமாட்டேன் என்று சொல்லும் நான் ஒருபக்கம் நிற்கிறேன்.
மக்களை கையேந்தி தங்கள் மானத்தை இழக்க வைக்க நாம் விரும்பவில்லை என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஓட்டுக்கு காசு கொடுக்கும் பாவிகளுக்கு வாக்களித்து, மக்கள் தொடர்ந்து தேச துரோகத்தை செய்து வருகின்றனர் என கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையில், சீமான் பேசிக் கொண்டிருந்தபோது, மது போதையில் இருந்ததாக கூறப்படும் ஒருவர் “ஏய்” எனக் கூவி வசைபாடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சீமான் தனது பேச்சை இடை நிறுத்தினார்.
பின்னர் அவர், இப்படிப்பட்ட குடிகாரர்களை உருவாக்கியது தவிர இந்த அரசுகள் வேறு என்ன செய்தது? என கேள்வி எழுப்பி தனது பேச்சை தொடர்ந்தார்.
அந்த நபரை சீமான் ஆதரவாளர்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
தொடர்ந்து, குடிக்கும் குவாட்டருக்கு ‘வீரன்’ என்று பெயர் வைத்தவர்களை நீங்கள் வீழ்த்தாமல் ஏன் நிற்கிறீர்கள்? மக்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்து, நாட்டை சீரழிப்பவர்களுக்கே வாக்களிக்கிறார்கள் என சீமான் கடுமையாக சாடினார்.
Hindusthan Samachar / P YUVARAJ