Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஏப்ரல் (ஹி.ச.)
ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் நவாஸ் கனிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த தேர்தல் விதிமீறல் தொடர்பான இரண்டு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி, ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினர் நவாஸ் கனிக்கு எதிராக இரண்டு தனித்தனியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில், மனுதாரர் தரப்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, பேருந்து நிலைய நுழைவாயிலில் மனுதாரர் அல்லது அவரது கட்சியினர் போஸ்டர் ஒட்டியதாக கூறப்பட்டாலும், அதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
வழக்கின் விவரங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கண்டறிந்து, நவாஸ் கனிக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / vidya.b