Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 17 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது,
மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்தத் தொகுதிகளின் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி:
விளாத்திகுளம் தொகுதிக்கு 328 பேலட் யூனிட்கள் (Ballot Unit), 328 கட்டுப்பட்டு கருவிகள் (Control Unit) மற்றும் 356 விவிபேட் (VVPAT) கருவிகள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன.
தூத்துக்குடி தொகுதிக்கு 432 பேலட் யூனிட்கள், 432 கட்டுப்பட்டு கருவிகள் மற்றும் 468 விவிபேட் கருவிகள் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் தொகுதிக்கு 368 பேலட் யூனிட்கள், 368 கட்டுப்பட்டு கருவிகள் மற்றும் 399 விவிபேட் கருவிகள் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு 357 பேலட் யூனிட்கள், 357 கட்டுப்பட்டு கருவிகள் மற்றும் 380 விவிபேட் கருவிகள் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 378 பேலட் யூனிட்கள், 378 கட்டுப்பட்டு கருவிகள் மற்றும் 409 விவிபேட் கருவிகள் ஓட்டப்பிடாரம் பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டுள்ளன.
கோவில்பட்டி தொகுதியில் அதிகபட்சமாக 762 பேலட் யூனிட்கள், 381 கட்டுப்பட்டு கருவிகள் மற்றும் 409 விவிபேட் கருவிகள் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,625 பேலட் யூனிட்கள், 2,244 கட்டுப்பட்டு கருவிகள் மற்றும் 2,421 விவிபேட் கருவிகள் இந்தப் பணிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் கடந்த 16.04.2026 முதல் தொடங்கி நடைபெற்று வரும் இப்பணிகள், வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் முன்னிலையில் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகின்றன.
திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள விளாத்திகுளம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதிகளில் இன்று (17.04.2026) பணிகள் முழுமையாக நிறைவுபெறும்.
இவ்வாறு ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b