Enter your Email Address to subscribe to our newsletters

கோவை ,19 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு இயக்கப்படும் புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயிலின் 153-வது ஆண்டு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியையொட்டி மலை ரெயிலின் எஞ்சின் மற்றும் பெட்டிகள் வண்ண மலர்கள் மற்றும் காகித தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
மேட்டுப்பாளையம்–ஊட்டி இடையே இயங்கும் இந்த மலை ரெயில், இயற்கை அழகுகளை நெருங்கி ரசிக்கச் செய்கிறது.
மலைகளை தழுவி செல்லும் மேகக்கூட்டங்கள், அருவிகள், நீரோடைகள் உள்ளிட்ட காட்சிகள் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கின்றன.
மேலும் குகைகள் வழியாக செல்லும் திகில் அனுபவமும் இந்த ரெயிலின் சிறப்பாகும்.
சுற்றுலா பயணிகளின் மனதை கவர்ந்துள்ள இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மலை ரெயிலுக்கு கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்ன அந்தஸ்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
153-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு மலை ரெயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி கொண்டாடி, ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
சேலம் கோட்ட ரெயில்வே சீனியர் மெக்கானிக்கல் என்ஜினீயர் கோகுல் வல்லுத் தோட்டம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர், இருப்புப்பாதை காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA