Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 19 ஏப்ரல் (ஹி.ச.)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நாளை (ஏப்ரல் 20) தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் ஒரே நாளில் மூன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நாளை காலை 11:00 மணிக்குத் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 11:20 மணிக்குக் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வந்தடைகிறார்.
அங்கு காலை 11:30 மணி முதல் 12:15 மணி வரை நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
அதனைத் தொடர்ந்து மதியம் 12:50 மணிக்குத் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வந்தடையும் அவர், மதியம் 1:00 மணி முதல் 1:45 மணி வரை அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
நெல்லை மாவட்டப் பயணத்தை முடித்துக்கொண்டு மதியம் 2:15 மணிக்குத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதிக்குச் செல்லும் அவர், மதியம் 2:25 மணி முதல் 3:10 மணி வரை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
அதன்பின் மதியம் 3:35 மணிக்குத் தூத்துக்குடி விமான நிலையம் சென்றடையும் ராகுல் காந்தி, அங்கிருந்து மாலை 3:50 மணிக்குத் தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். இரவு 7:20 மணிக்கு அவர் டெல்லி சென்றடைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிரசாரக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b