Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 19 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக மகளிர் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 43, 46 மற்றும் 47 ஆகிய வார்டுகளில் இன்று அவர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்திற்கு, மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பக்கிள்புரத்தில் தொடங்கி முனியசாமிபுரம், பாத்திமா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
பிரச்சாரத்தின் போது அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாகத் தமிழகம் உயர்ந்துள்ளது. 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற திராவிட மாடல் ஆட்சியில், விடியல் பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கான ஊக்குவிப்பு எனப் பெண்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாகத் தூத்துக்குடி மாநகராட்சியில் 50 சதவீதத்திற்கும் மேலாகப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றுவதே இந்த ஆட்சியின் சாதனைக்குச் சான்று.
கடந்த 5 ஆண்டுகளாகத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் உங்களோடு இணைந்து பணியாற்றியுள்ளேன்.
தொகுதியின் வளர்ச்சிப் பணிகளைத் தொய்வின்றித் தொடர, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தப் பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள், துணை மேயர் ஜெனிட்டா, மற்றும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சகாயராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் விமல் வங்காளியார், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b