Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 20 ஏப்ரல் (ஹி.ச)
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழைமை வாய்ந்த புராதன சிறப்பு மிகுந்தது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதப் பெருந்திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை ஏப்ரல் 21-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி காலை 7.15 மணிக்கு கொடிப்பட்டம் ரதவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காலை 10.45 மணியில் இருந்து 11.10 மணிக்குள் சிவன் கோவிலில் நந்தீஸ்வரர் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரதவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏப்ரல் 22 ம் தேதி காலை 9.00 மணிக்கு மேல் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊற்றும் விழா நடைபெறவுள்ளது.
திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் (சிம்மம், பூதம், ரிஷபம், பஞ்சமூர்த்தி) வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b