Enter your Email Address to subscribe to our newsletters

ஆம்பூர், 20 ஏப்ரல் (ஹி.ச.)
‘டாலர் சிட்டி’ என அழைக்கப்படும் ஆம்பூர் தொகுதியானது மத்திய, மாநில அரசுகளுக்கு அன்னிய செலவாணியை அதிகமாக ஈட்டி தரும் தொகுதியாக விளங்குகிறது. தோல் தொழில் மட்டுமின்றி அசைவ மற்றும் சைவ உணவு தயாரிப்பிலும் ஆம்பூர் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது.
கடந்த 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆம்பூர் தொகுதி இடையில் அதாவது 1971-ம் ஆண்டுக்கு பிறகு தொகுதி நீக்கம் செய்யப்பட்டது. பிறகு 2008-ல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது ஆம்பூர் தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டு அதன் பிறகு 2011-ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது.
தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தோல் பொருட்கள் தயாரிப்பு நிறைந்த பகுதியாக ஆம்பூர் உள்ளது. ஆம்பூரில் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் உலக அளவில் ஆம்பூர் பிரசித்தி பெற்றுள்ளது.
வாக்காளர்கள் எண்ணிக்கை:
ஆண் - 1,04,331
பெண் - 1,10,097
மூன்றாம் பாலினத்தவர் - 41
மொத்த வாக்காளர்கள் - 2,14,469
வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம், கிராமப்புற பகுதிகள் நிறைந் துள்ளன. நகர் பகுதியை காட்டிலும் கிராமப்புற பகுதிகளில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதியில் முதலியார்கள், வன்னியர்கள், கிறிஸ்தவர்கள், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருந்தாலும், ஆதி திராவிடர்கள் மற்றும் சிறுபான்மையினர் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக திகழ்கின்றனர்.
அரசியல் நிலவரம்:
ஆம்பூர் தொகுதி உருவாக்கப்பட்ட காலத்தில் காங்கிரஸ் வசம் இருந்த ஆம்பூர் காலப்போக்கில் திமுக கோட்டையாக மாறியது. பிற்காலத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் இத்தொகுதியில் அதிக முறை வெற்றி வாகை சூடியுள்ளனர்.
இந்த தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அ.செ.வில்வநாதன் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் பொறியாளர் வெங்கடேசனும், தவெக சார்பில் இம்தியாஸ், நாம் தமிழர் கட்சி சார்பில் அப்ஷியா நஸ்ரின் உட்பட மொத்தம் 16 பேர் களத்தில் உள்ளனர்.
16 பேர் போட்டியிட்டாலும் தொகுதியை கைப்பற்றுவதில் திமுக – அதிமுக இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திமுக வேட்பாளர் அ.செ.வில்வநாதன் மீது சொந்த கட்சியினரே அதிருப்தியில் இருப்பதால் அதிமுக தொகுதியை இந்த முறை எளிதாக கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கில் அதிமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
அதேநேரத்தில், அதிமுக கூட்டணி கட்சி சார்பில் பழனிசாமி மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்துள்ள நிலையில், திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, பிரேமலதா என அரசியல் கட்சியின் தலைவர்கள் திமுக வேட்பாளருக்காக ஆம்பூரில் பிரச்சாரம் செய்துள்ளதால் 3-வது முறை தொகுதியை திமுகவே கைப்பற்றும் என அக்கட்சியினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
தவெக மற்றும் நாதக கட்சியினர் தங்களது வழக்கமான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தாலும் தவெக வேட்பாளர் பிரச்சாரம் கொஞ்சம் மந்தமாகவே உள்ளதாக தொகுதி மக்களே கூறுகின்றனர்.
மக்களின் எதிர்பார்ப்புகள்:
ஆம்பூர் நகர் பகுதியில் அரசு மேல் நிலை பள்ளி அமைக்க வேண்டும்
நாயக்கனேரி மலை கிராமத்துக்கு பேருந்து வசதியை அதிகரிக்க
வேண்டும்.
பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ அமைக்க வேண்டும்.
ஆம்பூர் நகர் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும். ரெட்டித்தோப்பு மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
தோல் கழிவுநீர் பாலாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
Hindusthan Samachar / vidya.b