Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 21 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான விஷு மகாஜன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
தேர்தலுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது:
வாக்குச்சாவடிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1,868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 243 வாக்குச்சாவடிகள் 'பதற்றமானவை' எனக் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் போலீசார், துணை ராணுவத்தினர் மற்றும் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்படுவர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு நேரடியாகக் கண்காணிக்கப்படும்.
தேர்தல் பணிக்காக 2,242 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 6,726 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று கட்டப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை அவர்கள் அந்தந்த மையங்களுக்குப் பணிக்கு அனுப்பப்படுவர்.
வாக்குப்பதிவிற்காக 2,619 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,238 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 2,422 வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு (VVPAT) இயந்திரங்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் கூறியதாவது:
மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற 3,642 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 652 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2 கோடியே 15 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக பணப் பட்டுவாடா செய்ய முயன்றதாக 1 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரத்து 938 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, அது தொடர்பாக 22 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
வெளித் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்தந்த தொகுதிகளில் இருக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளனர். தீவிர கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b