Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச)
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், கலங்கரை விளக்கம் அருகில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் நடிகை நமீதாவுடன் இணைந்து வேனில் சென்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சட்டமன்றத் தேர்தலில் மக்களுக்காகத்தான் போட்டியிடுகிறேன். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை 100 நாட்களில் சரி செய்யப்படும் என்பதே என் வாக்குறுதி.
மக்களோடு மக்களாக அவர்கள் எப்போது அழைத்தாலும் பிரச்சனையை தீர்ப்பதற்கும், ஆதரவாகவும் இருப்பேன். குடிநீர் பிரச்சனை, சாக்கடை பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகள் இந்த தொகுதியில் உள்ளன.
பல இடங்களில் 5 மாடிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட இடங்களில், 11 மாடிகள் கட்டப்பட்டுள்ளன. 60 ஆண்டுகள் கடந்தும், குடியிருப்புகள் இடியும் நிலையில் உள்ளன. குடியிருப்புகள் முறையாக கட்டப்படவில்லை. கட்டப்பட்ட குடியிருப்பிலும் சாமானிய மக்களை 9 அல்லது 10வது மாடியில் வசிக்க வைத்து, வியாபார ரீதியாக பணம் கொடுத்தவர்கள் முதல் மூன்று மாடிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீனிவாசபுரத்தில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட சமூகக் கூடம் மூடப்பட்டே இருக்கிறது. 23 ஏக்கர் நிலம் மீனவர்களிடம் வணிக வளாகம் கட்டுவதற்காக கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. எத்தனையோ தேர்தல்களை சந்தித்துவிட்டேன். வளர்ந்த கட்சியுடன் சேர்ந்து வளர்ந்து வருகிறோம். நீங்கள் தரும் வெற்றியின் மூலம் உங்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன்.
கலங்கரை விளக்கம் அருகில் கட்டப்பட்டுள்ள மீன் மார்கெட்டில் மக்கள் வந்து வாங்குவதற்கு இடம் இல்லாததால், வெளியில் விற்கின்றனர். மேலும், மீனவ பெண்கள் பொருளாதாரத்தில் மேம்படுத்துவதற்கு என தனியாக திட்டம் வைத்துள்ளேன். மயிலாப்பூர் பகுதியானது பொருளாதாரத்தில் சிறந்த பகுதியாக வளர வேண்டும்.
கெஜ்ரிவால், ராகுல் காந்தி என யார் வந்தாலும், ஸ்டாலின் வந்து பேசினாலும் கூட தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது.
ஆனால் திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தரமாட்டார்கள். மயிலாப்பூர் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை நமீதா,
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது. வேட்பாளர்களுக்காக நன்றாக பிரச்சாரம் செய்துள்ளோம்.
எனவே தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி தான் ஜெயிக்கும் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN