Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 24 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது குற்றாலமும், குற்றால அருவிகளும் தான்.
அதாவது, சீசன் காலகட்டங்களில் இந்த குற்றால அருவிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் குற்றால அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சியுடன் செல்வது வழக்கம்.
இப்படி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்வித்த, இந்த குற்றாலமானது தற்போது கடுமையான வெயிலின் தாக்கத்தின் காரணமாக முழுமையாக வறண்டு காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றால மெயின் அருவியை சீரமைக்க திட்டமிடப்பட்டு தமிழக சுற்றுலாத் துறை மூலம் தற்போது சீரமைப்பு பணிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் இருந்த பாரம்பரியமிக்க அபாய வளைவானது கடுமையான போராட்டத்திற்கு பின் அகற்றப்பட்ட நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடம் சற்று அகலப்படுத்தப்பட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பிரம்மாண்டமாக தயாராகி வரும் குற்றாலம் மெயின் அருவி குறித்தான 3டி வரைபடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பணிகள் ஆனது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, இன்னும் ஒரு மாத காலங்களில் சீசன் ஆனது தொடங்கும் என்பதால் அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்போது பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN