Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 24 ஏப்ரல் (ஹி.ச.)
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
1993-ஆம் ஆண்டு 73-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இச்சட்டம், இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
தேச சேவையோடு மக்கள் சேவையிலும் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் மிகுந்த உத்வேகம் அளிக்கிறது. மக்களின் மகிழ்ச்சியில்தான் அரசனின் மகிழ்ச்சி உள்ளது.
அவர்களின் நலனில்தான் அரசின் நலனும் அடங்கியுள்ளது. தனக்குப் பிரியமானதை அல்ல, மக்களுக்குப் பிரியமானதையே அரசன் பிரியமாகக் கருத வேண்டும்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இத்தினத்தை கொண்டாடுகிறது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அங்கீகாரமும் சட்ட அதிகாரமும் வழங்கிய முக்கிய திருத்தத்தின் 33-வது ஆண்டு நிறைவை இது குறிக்கிறது.
நிகழ்ச்சியில், பிரதமரின் செய்தி வாசிக்கப்பட்டு, மாநில மற்றும் யூனியன் பிரதேச பஞ்சாயத்து ராஜ் துறைகள் மூலம் நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அலுவலர்களுக்கு விநியோகிக்கப்படும்.
இந்நிகழ்வில் மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பகேல், அமைச்சக செயலாளர் விவேக் பரத்வாஜ் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், அரியானா ஆகிய மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
விழாவில், பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீடு (PAI) 2.0 அறிக்கை வெளியிடப்படுகிறது. மேலும், அமைச்சகத்தின் ‘பஞ்சாயத் தரோஹர் முன்முயற்சி’யின் கீழ் கிராமப்புற பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட மூன்று நூல்கள் வெளியிடப்படுகின்றன.
Hindusthan Samachar / vidya.b