Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 25 ஏப்ரல் (ஹி.ச.)
சேலத்தைச் சேர்ந்த மன்சூர், அவரது மனைவி வாகிதா பானு, மகன் அஜ்மல் மற்றும் வாகிதாவின் சகோதரர், தாயார் ஆகிய 5 பேரும் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு சேலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே வந்தபோது, அஜ்மல் ஓட்டிவந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஓடைக்குள் தலைகுப்புற பாய்ந்தது. விபத்தின் தீவிரத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ஓடைக்குள் சிக்கியிருந்த 5 பேரையும் போராடி மீட்டனர். அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி போலீசார், விபத்துக்குள்ளான காரை கிரேன் மூலம் மீட்டனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்தாரா அல்லது வேகமாக வந்ததால் விபத்து நேர்ந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதிச் சடங்கிற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b