Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
கோவையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து தற்போதைய தேர்தல் சூழ்நிலையைப் பற்றி கடுமையாக விமர்சித்தார்.
குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் கூறியதாவது, இந்த முறை நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இது உண்மையான ஜனநாயகமா அல்லது பணநாயகமா என்ற கேள்வி எழுகிறது என்றும் அவர் தெரிவித்தார். அடாவடியாக அராஜகமாக பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கபட்டது.
மேலும், சில இடங்களில் வாக்காளர்களை கவரும் வகையில் பணம் மட்டுமல்லாமல் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக கோவை பகுதியில் இப்படியான சம்பவங்கள் நடந்ததாக அவர் தெரிவித்தார். இத்தகைய செயல்களை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
இளைஞர்களின் நிலைமை குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். போதைப் பொருட்களின் தாக்கம் அதிகரித்து வருவதால் இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
சமூகத்தில் இப்படியான பிரச்சினைகள் அதிகரித்து வரும் சூழலில், அரசியல் கட்சிகள் அதனை தடுக்க முயற்சி செய்யாமல் தேர்தல் வெற்றிக்காக பணம் செலவழிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றன என்றார்.
அதேபோல், வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டியாக பணம் வழங்கி வாக்குகளை வாங்க முயன்றதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் என்பது கருத்துகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் நடக்க வேண்டிய ஒன்று. ஆனால் தற்போது பணம் உள்ளவர்களே தேர்தலை கட்டுப்படுத்தும் நிலை உருவாகி விட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Hindusthan Samachar / ANANDHAN