பராமரிப்பு பணி காரணமாக அரக்கோணம்-திருத்தணி மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.) பராமரிப்பு பணி காரணமாக அரக்கோணம்-திருத்தணி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை சென்டிரல் -அரக்கோணம
Changes in Arakkonam-Tiruttani Electric Train


சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.)

பராமரிப்பு பணி காரணமாக அரக்கோணம்-திருத்தணி மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை சென்டிரல் -அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் அடுத்த மாதம் (மே) 16-ந்தேதி வரையில் நள்ளிரவு 12.45 மணி முதல் அதிகாலை 2.15 மணி வரையிலும் (1 மணி நேரம் 30 நிமிடம்), மதியம் 12.45 மணி முதல் 1.45 மணி வரையிலும் (1 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருத்தணியில் இருந்து வருகிற மே 16-ந்தேதி வரையில் இரவு 9.15, 11.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில்கள் நேற்றும் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அரக்கோணத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற மே 17-ந்தேதி வரையில் அதிகாலை 4, 5 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து வருகிற மே 16-ந்தேதி வரையில் காலை 11, இரவு 10.55 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் திருவாலங்காடு-அரக்கோணம் இடையேயும், திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில் திருத்தணி-திருவாலங்காடு இடையேயும் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரெயில்கள் நேற்றும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b