Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 27 ஏப்ரல் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு எதிராக 2000-க்கும் மேற்பட்ட எல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பாக தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் நாமக்கலில் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில்,
இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மேலாக ரூ.50 கோடிக்கும் மேற்பட்ட வாடகைத் தொகை வழங்கப்படாமல் பாக்கியாக உள்ளது.
இதனால், லாரி உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வாடகை பாக்கி காரணமாக வங்கி கடன் தவணைகள் (EMI) செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் இருந்ததாகவும், தேர்தல் முடிந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டத்தில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று காலை முதல், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் இருந்து எல்பிஜி ஏற்றும் டேங்கர் லாரிகள், கேஸ் ஏற்றாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த வேலைநிறுத்தம் நீடித்தால், சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam