Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 03 ஏப்ரல் (ஹி.ச)
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதன்படி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதற்காக நெல்லைக்கு இன்று (ஏப்ரல் 03) வருகை தருகின்றார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடி செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லைக்கு வருகிறார்.
நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதாவது தி.மு.க. வேட்பாளர்களான சபாநாயகர் அப்பாவு (ராதாபுரம்),
அப்துல் வகாப் எம்.எல்.ஏ. (பாளையங்கோட்டை), சுப்பிரமணியன் (திருநெல்வேலி), காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி, அம்பை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
இந்த கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இரவில் அங்கு தங்கும் அவர் நாளை
(ஏப்ரல் 04) காலை 9 மணிக்கு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு மாலையில் அவர் செல்கிறார்.
அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களான மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), ராஜா எம்.எல்.ஏ. (வாசுதேவநல்லூர்), கலை கதிரவன் (தென்காசி), கூட்டணி கட்சியான ம.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் (கடையநல்லூர்), சங்கரன்கோவில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக இன்று திருநெல்வேலிக்கு வரவிருக்கும் நிலையில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், நெல்லை மாநகர காவல் எல்லையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b