Enter your Email Address to subscribe to our newsletters

இஸ்லாமாபாத், 03 ஏப்ரல் (ஹி.ச.)
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும், அரபிக்கடலில் உள்ள ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹர்மூஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் தாமதம் / சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது.
கச்சா எண்ணெய் வரத்து குறைவு, விலை அதிகரிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் ஏற்றம்பெற்று வருகிறது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி பாகிஸ்தானில் பெட்ரோல் லிட்டருக்கு 137 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் 458 ரூபாய்க்கு (அந்நாட்டு மதிப்பில்) விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், டீசல் லிட்டருக்கு 185 ரூபாய் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் டீசல் ரூ. 520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM