Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, அரசியல் சூழ்நிலை பரபரப்பாக மாறியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் பகுதியில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று திரண்டுள்ளனர்.
தமிழக அமைச்சர்கள், திமுக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் இந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முகாமிட்டு வருகின்றனர். தேர்தல் பிந்தைய நிலவரங்கள், வாக்கு சதவீதம் மற்றும் அரசியல் சூழ்நிலை குறித்து பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
நேற்று வெளியான தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இதையடுத்து, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களை அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்கள் நேரில் சந்தித்து, தேர்தல் முடிவுகள் தொடர்பான நிலவரங்கள் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, முத்துசாமி, பெரிய கருப்பன், சி.வி.கனேசன் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களும் பங்கேற்றனர். ஆலோசனையில், திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிடும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படும் வரை, ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
.எந்தவித குளறுபடியும் நடந்து விடக் கூடாது. நம்முடைய பார்வையில் இருந்து எந்த ஒரு விஷயமும் தவறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Hindusthan Samachar / vidya.b