Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய நாளை(மே 1) முதல் பழைய மெட்ரோ கார்டுகள் செல்லாது எனவும் நாளை முதல் சிங்கார சென்னை அட்டை முழுமையாக நடைமுறைக்கு வருவதாகவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இது பற்றி வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது போக்குவரத்து அட்டை) அறிமுகப்படுத்தியது.
இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
எனவே, மெட்ரோ இரயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் மேலான ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b