அரசு சட்டக் கல்லூரியில் மாபெரும் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
திருநெல்வேலி, 09 ஏப்ரல் (ஹி.ச.) தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா என்ற முழக்கத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரி வ
அரசு சட்டக் கல்லூரியில்மாபெரும் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு


திருநெல்வேலி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா என்ற முழக்கத்துடன், திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (09.04.2026) மாபெரும் தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் இதனைத் தொடங்கி வைத்தார்.

2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் அரசு சட்டக்கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், தேர்தல் விழிப்புணர்வு மன்றம் மற்றும் உடற்கல்வித்துறை என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.

வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவ-மாணவியர்கள் தேர்தல் ஆணையத்தின் 'cVIGIL' செயலி வடிவில் மைதானத்தில் நின்று காட்சிப்படுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சுமார் 1,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் இராமபிரான் ரஞ்சித்சிங், பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், நாராயணி, புவனேஸ்வரி, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b