Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 09 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதப் பெருந்திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, திருவிழாவின் தொடக்க நிகழ்வான கால்நாட்டு விழா கோவில் முன்பாக நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் போது, நவதானியங்களை மண்ணில் இட்டு மங்கலப் பொருட்கள் முழங்க கால் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாளுக்குச் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் காட்டப்பட்டன.
இதற்கான பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் செல்வம் மற்றும் சண்முகம் பட்டர்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் ருக்மணி, மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, பி.எஸ்.கே. ஆறுமுகம், சாந்தி, ரமேஷ் கிருஷ்ணன், நெல்லையப்பன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b