புதுச்சேரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடக்கம் – வாக்காளர்களால் அதிகரித்த உற்சாகம்
புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.) மத்திய ஆட்சிப் பகுதியாகிய புதுச்சேரி முழுவதும் ஜனநாயகத் திருவிழாவான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இ
வாக்களிப்பு


புதுச்சேரி, 09 ஏப்ரல் (ஹி.ச.)

மத்திய ஆட்சிப் பகுதியாகிய புதுச்சேரி முழுவதும் ஜனநாயகத் திருவிழாவான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பமானது. அதற்கு முன்பே வாக்குச்சாவடிகளின் முன்பு வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது காணப்பட்டது.

மாநிலம் முழுவதும் பல்வேறு தனித்துவமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்காளர்களை வரவேற்று வருகின்றன.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் குழுக்களாக வந்து வாக்களித்து வருகின்றனர்.

முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல் நலக்குறைவுடையோர் குடும்பத்தினரின் உதவியுடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து, ஜனநாயகத்தின் மதிப்பை உயர்த்துகின்றனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் 30 தொகுதிகளில் மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் 34 தேசிய கட்சி வேட்பாளர்கள், 63 மாநில கட்சி வேட்பாளர்கள், 80 பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத வேட்பாளர்கள் மற்றும் 117 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 294 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவிற்கு 1,099 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), 1,099 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1,099 வி வி பி ஏ டி(VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கூடுதலாக அவசரநிலைக்கு 364 EVM, 364 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 459 வி வி பி ஏ டி (VVPAT ) இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அரை இராணுவப்படையினர், போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.

அரை இராணுவப்படைகள் மற்றும் புதுச்சேரி போலீசாரை உள்ளடக்கிய மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் பிரிவு 144 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி, 5 பேருக்கு மேல் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

தேர்தலை சார்ந்த ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்படவில்லை.

Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV