Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம், 01 மே (ஹி.ச.)
மே 1– நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு மத்திய அரசு மேலும் ரூ.8,097 கோடி நிதி உதவி வழங்கத் தயாராகியுள்ளது.
ஏற்கனவே முதல் கட்டமாக ரூ.11,440 கோடி உதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2-வது கட்ட உதவி திட்டத்திற்கான நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன.
இந்த புதிய நிதி உதவி தொடர்பான கோப்புக்கு மத்திய எஃகு துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த முன்மொழிவு நிதி அமைச்சகத்தின் செலவினத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கு ஒப்புதல் கிடைத்ததும், மத்திய அமைச்சரவை இறுதி அனுமதி வழங்கும் என கூறப்படுகிறது.
முதல் கட்ட உதவியைப் போலவே, இந்த ரூ.8,097 கோடியும் ‘ஈக்விட்டி’ வடிவில் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் ஆலையின் கடன் சுமை அதிகரிக்காமல், மூலதன வலிமை மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு ரூ.11,440 கோடி முதல் கட்ட நிதி உதவி வழங்கப்பட்டது.
இதில் ரூ.10,300 கோடி ஈக்விட்டியாகவும், ரூ.1,140 கோடி வேலைநிறைவு மூலதனக் கடனாகவும் வழங்கப்பட்டது.
தற்போது விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் 3 பிளாஸ்ட் ஃபர்னஸ்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், எஃகு உற்பத்தி மற்றும் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
இந்த முன்னேற்றம் தொடர வேண்டுமென மத்திய அரசு கருதுவதால், கூடுதல் நிதி உதவியின் மூலம் ஆலையை முழுமையான லாப நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA