கேரள முதலமைச்சரை தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம் - ராகுல் காந்தியுடன் கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சந்திப்பு
புதுடெல்லி, 12 மே (ஹி.ச.) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 140 இடங்களில் 102 இடங்களை வென்றது. இந்த தீர்க்கமான பெரும்பான்மைக்குப் பிறகும், UDF இன்னும் தனது முதலமைச்சர் வேட்பாளர
Former Kerala Congress Leaders Meet with Rahul Gandhi


புதுடெல்லி, 12 மே (ஹி.ச.)

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF), சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 140 இடங்களில் 102 இடங்களை வென்றது.

இந்த தீர்க்கமான பெரும்பான்மைக்குப் பிறகும், UDF இன்னும் தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காதது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை ஈர்த்துள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (CLP) ஒரு சுருக்கமான தீர்மானத்தை நிறைவேற்றியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின், முதலமைச்சர் வேட்பாளர் குறித்த இறுதி முடிவை எடுக்க கட்சி மேலிடத்திற்கு அதிகாரம் அளித்து அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான செயல்முறை இன்று புதுடெல்லியில் தொடங்கியது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (KPCC) முன்னாள் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் பதவிக்கான முன்னணி வேட்பாளர்களாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் உள்ளனர்.

மாநில முதலமைச்சரை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் மேலிடத் தலைமையுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் KPCC தலைவர்களான முல்லப்பள்ளி ராமச்சந்திரன், எம்.எம். ஹசன், கே. சுதாகரன், வி.எம். சுதீரன், கே. முரளிதரன், ஏ.பி. அனில்குமார், பி.சி. விஷ்ணுநாத் மற்றும் ஷாஃபி பரம்பில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு முன்பு, அடுத்த கேரள முதலமைச்சர் குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்த எம்.எம். ஹசன், கூறுகையில்,

காங்கிரஸ் மேலிடம் இந்த விவாதத்திற்காக எங்களை இங்கு வரச் சொன்னது... முதலமைச்சர் பதவி குறித்து விவாதங்கள் நடைபெறும் என நம்புகிறேன்... முடிவை அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கோருகிறோம்... அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு மேலிடம் முடிவெடுக்கும், என்று தெரிவித்தார்.

மற்றொரு முன்னாள் கே.பி.சி.சி தலைவரான கே. சுதாகரன், ஆலோசனைகள் குறித்த விவரங்களை வழங்க மறுத்துவிட்டார். கேரளாவில் இருந்து புறப்படுவதற்கு முன், நான் மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் திரும்புவேன் என்று கூறிய அவர், தலைமைப் போட்டி குறித்து மேலும் கருத்து தெரிவிக்கவில்லை.

Hindusthan Samachar / vidya.b