Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 மே (ஹி.ச.)
தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று (13-05-26) காலை 9:30 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார்.
அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பினர் தரப்பில் விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த விவாதத்தின் போது, காங்கிரஸ், சிபிஎம், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏக்கள், எம்.எல்.ஏ காமராஜ் உள்ளிட்டவர்கள் தவெக அரசு ஆட்சியில் நீடிப்பதற்கு ஆதரவு அளிப்பதாகப் பேசினர்.
அதனை தொடர்ந்து சி.வி.சண்முகம் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் 22 பேர் தவெக அரசுக்கு ஆதரவளிக்கவில்லை. இதன் மூலம் அதிமுக இரண்டாக உடைந்தது என்று நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில், தலைமைச் செயலக வாயிலுக்கு வெளியே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் தவெகவுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று நான் அவையில் நான் பேசினேன். ஏற்கனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி என்னை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் மற்ற பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
அதில் கொறடா இன்னும் பல பொறுப்புகள் நியமிக்கப்பட்டது. கொறடாவாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமித்தோம். அவர் அதிமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முழுமையான தகவல்களை மின்னஞ்சல் பதிவு தபால் மூலம் வழங்கினார். ஆனால் ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுகவிற்கு துரோகம் விளைவிக்கின்ற விதமாக நேற்றைய தினம் அறிவிப்பை வெளியிட்டார்கள்.
அதிமுக எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று என்னுடைய அனுமதியின் பெயரில் கொறடா அக்னி கிருஷ்ணமூர்த்தி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தகவலை தெரிவித்த பிறகும், அவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆதரவ அளிப்போம் என்ற செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள்.
இது முற்றிலும் தவறானது, சட்டத்துக்கு புறமானது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் என்னை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சில பேர்களுக்கு ஆசைவாதத்தை கூட்டி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கப்பட்டுகின்றது. அந்த ஆட்சியில் இடம்பெறுவதற்கு ஒரு குறிப்பிட்ட அமைச்சர்கள், அதாவது சுமார் ஆறு அமைச்சர் பதவி கொடுக்கின்றார்கள்.
10 வாரியத் தலைவர் கொடுப்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தை கூட்டி அந்த அடிப்படையில் ஓட்டெடுப்பில் அவர்கள் இந்த அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள்.
2011ல இருந்து 2021 வரை அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியும், எங்களுடைய தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயர்களைச் சொல்லியும் தான் வாக்குகளை கேட்டு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் 47 பேரும்.
அப்படி வெற்றி பெற்ற கட்சிக்கு விசுவாசமாக இல்லாமல், அடையாளம் காட்டப்பட்ட கட்சிக்கு துரோகம் விளைவித்தவர்கள் இவர்கள். இன்றைக்கு ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு சூழலில் வெற்றி பெறுவதும், வெற்றி வாய்ப்பு இழப்பதும் இயல்பானது ஒன்றுதான். ஏதோ அதிமுகவுக்கு மட்டும் நிகழ்ந்ததுஅல்ல.
திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வந்த சூழலில் இன்றைக்கு தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் கூட அதிமுக 47 இடங்கள் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் இது மிகப்பெரிய வெற்றி. இந்த சூழ்நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு சில முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகி அவர்களுடைய ஆசைக்கு இணங்கி தவறான வழியில் அழைத்து சென்றிருக்கின்றார்கள்.
இது உண்மையிலும் சட்டத்துக்கு புறம்பானது, நீதிக்கு புறம்பானது. இன்றைய முதலமைச்சர் தூய்மையான ஆட்சி நடத்த வேண்டும் என்று சொல்ல்கிறார். தூய்மையான ஆட்சி நடத்த வேண்டும் என்றால் எல்லா இடத்திலும் தூய்மையாக இருக்க வேண்டும். ஒரு கட்சியில் கருத்து வேறுபாடு நடக்கிறது. அந்த கருத்து வேறுபாடுகளை மையமாக வைத்து ஒரு சாரார் வீட்டுக்கு சென்று வருவது எந்த விதத்தில் நியாயம்? இதுதான் தூய்மையானதா?. எல்லா இயக்கத்திற்கும் சோதனை வரும். இது தவறான முன் உதாரணம்.
இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத ஒன்று. இன்றைக்கு எத்தனையோ கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கிறது. எத்தனையோ கட்சிகள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கிறது.
ஆனால் எந்த தலைவருமே பிரிந்த இயக்கத்துக்கு வீட்டுக்கு சென்றது கிடையாது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் தவறான பாதையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் சென்று கொண்டிருப்பது உண்மையிலேயே வருத்தம் அளிக்கின்றது.
குதிரை பேரம் நடைபெற்றிருக்கிறது என்று தகவல் பரவுகிறது, பேசப்பட்டு வருகிறது. உண்மையிலேயே தூய்மையான ஆட்சி நடத்துவோம் என்று சொல்லிவிட்டு இதற்கெல்லாம் இடமளிக்கின்றார்கள்.
திமுக எதிர்ப்பில் தான் அதிமுக தோன்றியது. அப்படி இருக்கையில் நாங்கள் எப்படி திமுகவுடன் கூட்டணி வைப்போம். சி.வி.சண்முகத்துக்கு வேறு எந்த காரணமும் கிடைக்கவில்லை. அதனால் இப்படி ஒரு காரணத்தை சொல்லி மக்களிடம் ஒரு தவறான செய்தியை பரப்புகிறார்கள்.
அதிமுகவை பொறுத்தவரைக்கும் எங்கள் கூட்டணியைத் தவிர்த்து வேறு யாரிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 100க்கு 100 சதவீதம் திமுகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b