Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 13 மே (ஹி.ச.)
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகனும், பாஜக தலைவர் அபர்ணா யாதவின் கணவருமான பிரதீக் யாதவ் (வயது 38), இன்று காலை லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இன்று காலை குடும்பத்தினரால் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இறப்புக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்குப் பிறகு கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சாதனா குப்தாவின் மகனும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் சகோதரருமான பிரதீக் யாதவ், குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு இருந்தபோதிலும் அரசியலில் இருந்து விலகியே இருந்தார். லக்னோவில் தொழில் மற்றும் உடற்பயிற்சி துறைகளில் கவனம் செலுத்தி வந்தார்.
இது குறித்து சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ள தகவலில் பிரதீக் யாதவ் மறைந்தார், ஆழ்ந்த வருத்தம்! இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் என இரங்கல் தெரிவித்துள்ளது.
பிரதீக் யாதவ் 2011-ம் ஆண்டு அபர்ணா யாதவை திருமணம் செய்தார். அபர்ணா யாதவ் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிட்டு, ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2022-ல் பாஜகவில் இணைந்த அவர், 2024-ல் உத்தரப் பிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இளம் வயதில் பிரதீக் யாதவிற்கு ஏற்பட்ட மரணம் சமாஜ்வாதி கட்சி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b