Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
தமிழக அரசின் தற்போதைய நிதிநிலை மற்றும் வரவு-செலவு குறித்து வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
நடப்பு நிதியாண்டில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய நிதி, நிலுவையில் உள்ள திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நிதித்துறை முதன்மைச் செயலாளர், திட்டக் குழு அதிகாரிகள் மற்றும் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மாநிலத்தின் கடன் சுமை, வரி வருவாய் நிலவரம் மற்றும் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதிப் பங்கீடு ஆகியவை குறித்தும் அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கமளித்தனர்.
அரசின் நிதிநிலையை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடன், தற்போதைய நிதிச் சுமை, தேவையான சீர்திருத்தங்கள் ஆகியவை இந்த அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், முக்கிய நலத்திட்டங்களான மகளிர் உரிமைத் தொகை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் எந்தவித தடையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வெள்ளை அறிக்கை வெளியான பின்னர், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நிதி நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Hindusthan Samachar / vidya.b