Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 மே (ஹி.ச.)
இந்தியா மட்டுமின்றி உலக அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது.
இந்த கல்வி நிறுவனத்தின் சேர மாணவ, மாணவிகளின் ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. படிப்புக்கு மட்டுமின்றி புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பெயர் பெற்றது சென்னை ஐஐடி கல்வி நிறுவனம்.
உலகளவில் உள்ள தொழிற்துறையில் அவ்வப்போது புதிய புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் நிலையில் அதற்கு ஏற்ப புதிய பாடப்பிரிவுகளை சென்னை ஐஐடி ஆண்டுதோறும் அறிமுகம் செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 2026-2027 கல்வி ஆண்டிற்கான புதிய பாடப்பிரிவுகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, சென்னை ஐஐடியில் இளங்கலையில் பிஎஸ் பட்டப்படிப்பில் பிஎஸ் டேட்டா சைன்ஸ் அண்ட் அப்பிளிக்கேஷன்ஸ், பிஎஸ் எலக்ட்ரோனிக் சிஸ்டம்ஸ், பிஎஸ் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி, பிஎஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் டேட்டா சைன்ஸ், பிஎஸ் கணிதம், பிஎஸ் கெமிஸ்ட்ரி, பிஸ் மெடிக்கல் சைன்ஸ் அண்ட் இன்ஜினியரிங் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், முதுகலைப் படிப்பில் எம்.டெக் செமிகண்டெக்டர் மெட்டிரியல்ஸ் டெக்னாலஜி, எம்.டெக் ரோபோட்டிக்ஸ், எம்.டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்எஸ்சி பொருட்கள் மற்றும் உற்பத்தி, எம்எஸ்சி நிலைத்த பொறியியல், எம்எஸ்சி கடலோர மற்றும் கடல்சார் பொறியியல், எம்எஸ்சி விளையாட்டுப் பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு, மின் பொறியியலில் எம்.டெக் ஆகிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பிஎஸ் பட்டப்படிப்பில் சேருவதற்கு வயது வரம்பு கிடையாது. 12-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு வரும் மே 31- ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிப்பது மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://study.iitm.ac.in என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம்.
இது குறித்து சென்னை ஐஐடி டீன் (பாடப்பிரிவுகள்) பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் கூறுகையில், சென்னை ஐஐடி தொடங்கியுள்ள புதிய திட்டங்கள் தொழில்துறை, ஆராய்ச்சி, சமூகத்தில் மாறிவரும் தேவைகளைப் பிரதிபலிக்கின்றன. இவை மாணவர்களுக்கு வலுவான அடிப்படை அறிவுடன், பல்துறைச் சார்ந்த, தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் வளர்ந்து வரும் துறைகளில் உயர்தரக் கல்வியைப் பெற்று எதிர்கால வாழ்க்கைக்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும் வகையில், நெகிழ்வான, இணைய அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகளையும் நாங்கள் விரிவுபடுத்தி வருகிறோம் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN