Enter your Email Address to subscribe to our newsletters

காசியாபாத், 14 மே (ஹி.ச)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடைபெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குடியரசுத் தலைவர் வண்ண விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
விழாவின்போது அவர் அணிவகுப்பை பார்வையிட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
குடியரசுத் தலைவர் வண்ண விருது, ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் உயரிய கௌரவங்களில் ஒன்றாகும்.
இந்த விருதின் அடையாளமாக ‘நிஷான்’ எனப்படும் சின்னம், அப்படையின் அனைத்து அதிகாரிகளின் சீருடையின் இடது கை பகுதியில் அணியப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை, நாடு முழுவதும் இயற்கை பேரிடர்கள், தொழில்துறை விபத்துகள் மற்றும் பிற அவசரநிலைகளின் போது மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. காசியாபாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இதற்கு முன்பும் குடியரசுத் தலைவர் சார்பில் பல்வேறு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு குடியரசுத் தலைவர் வண்ண விருதை வழங்கியுள்ளார்.
2022 மே 10 அன்று குவாஹாட்டியில் அசாம் காவல்துறைக்கும், 2023 பிப்ரவரி 14 அன்று கர்னாலில் உள்ள ஹரியானா காவல் அகாடமியில் ஹரியானா காவல்துறைக்கும், 2024 டிசம்பரில் ராய்ப்பூரில் 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி சத்தீஸ்கர் காவல்துறைக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b