Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 16 மே (ஹி.ச)
2026 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் யுடிஎப் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வி.டி. சதீசனை அடுத்த முதலமைச்சராக காங்கிரஸ் கட்சி மே 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் 102 இடங்களை கைப்பற்றி, இடது ஜனநாயக முன்னணியின் 10 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.
சதீசன் மே 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு லோக் பவனில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் பெட்ரோல் விலை விவகாரத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ சாண்டி உம்மன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் பேசிய சாண்டி உம்மன் கூறியதாவது,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஒற்றுமையாக இருக்கும். முதல்வராக பதவியேற்கவுள்ள வி.டி. சதீசன் தலைமையில் கேரளத்தில் திறமையான அரசை அமைக்கும்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக UDF-ஐ நாங்கள் வழிநடத்தி வருகிறோம். எனவே, எங்கள் கூட்டணி கட்சிகளை தொடர்ந்து அரவணைத்துச் செல்வோம். கேரளத்திற்கும், கேரள காங்கிரஸுக்கும் பலமாக விளங்கும் இந்த கூட்டணியை தக்கவைப்போம். முன்பு போலவே இதுவும் மிகவும் திறமையான அரசாக இருக்கும்.
நான் அமைச்சரவையில் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை அரசும், முதலமைச்சரும், எனது தலைமையும்தான் முடிவு செய்ய வேண்டும். அதை அவர்களிடமே விட்டுவிடுகிறேன்.
பெட்ரோல் விலை தொடர்பான முந்தைய வாக்குறுதிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
லிட்டர் 50 ரூபாய் என்ற முழக்கத்துடன்தான் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. பாஜக அரசின் வாக்குறுதி 50 ரூபாய்க்கு பெட்ரோல் தருவோம் என்பதுதான்.
ஆனால் இப்போது அரை லிட்டர் பெட்ரோலின் விலையே 50 ரூபாயைத் தாண்டியுள்ளது. எனவே பாஜகவிடமிருந்து நேர்மறையான எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b