Enter your Email Address to subscribe to our newsletters

திருவிடைமருதூர் , 18 மே (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே எஸ்.புதூரில் தமிழ்நாடு அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகின்றது.
இதில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.20 கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார்கள் எழுந்தன.
எஸ்.புதூர் டாஸ்மாக் கடை எண் 8123-ல் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலையை விட ரூ.20 அதிகமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி டாஸ்மாக் மண்டல மேலாளர் மேற்கொண்ட விசாரணையில் கூடுதல் விலை வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ரகசியமாக கண்காணிக்கப்பட்டதில், குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது.
இதனையடுத்து, எஸ்.புதூர் டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்த மேற்பார்வையாளர்கள் மனோகரன், ஆறுமுகம் மற்றும் விற்பனையாளர் சேகர் ஆகிய மூன்று பேர் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கூறுகையில்,
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்கக் கூடாது என தெளிவான உத்தரவு உள்ளது.
விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் கூடுதல் விலை வசூல் குறித்து 10581 என்ற கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல் தொடர்பான புகார்களை தடுக்க, திடீர் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b