Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 மே (ஹி.ச.)
எரிபொருள் மற்றும் சிஎன்ஜி விலை உயர்வை அடுத்து கட்டண மாற்றியமைப்பு கோரி, டெல்லி-என்சிஆர் பகுதியில் வணிக வாகன இயக்குநர்கள் மற்றும் டாக்சி தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (AIMTC) மற்றும் சாலக் சக்தி யூனியன் உள்ளிட்ட போக்குவரத்து அமைப்புகளால் தொடங்கப்பட்ட இந்த 72 மணி நேர வேலைநிறுத்தத்தில், லாரி இயக்குநர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் மேக்ஸி-கேப் ஓட்டுநர்கள் பங்கேற்றுள்ளனர்.
வேலைநிறுத்தம் நடந்தபோதும், புதுடெல்லி ரயில் நிலையம் மற்றும் தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று அன்றாட போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகை கார்கள் பெரும்பாலும் வழக்கம்போல் இயங்கின.
இது தொடர்பாக,பல்வேறு வாடகை கார் சேவை ஓட்டுநர்கள் கூறுகையில்,
டெல்லி-என்சிஆரில் கட்டணங்கள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக மாற்றியமைக்கப்படவில்லை என்றும், ஆனால் எரிபொருள், வாகன பராமரிப்பு மற்றும் குடும்பச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளது.
சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் விலை உயர்வு ஓட்டுநர்கள் மீது கடும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.
சிஎன்ஜி மற்றும் எரிபொருள் கூடுதல் கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும். டாக்சி கட்டணங்களை உயர்த்த வேண்டும். தொடரும் நிதி நெருக்கடி டெல்லியில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களின் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும்.
என அவர்கள் எச்சரித்தனர்.
இந்தப் போராட்டம் நாளை
(மே 23, சனிக்கிழமை) வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. அரசின் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணங்களை உடனடியாக மாற்றியமைக்க டெல்லி அரசு தவறினால், வரும் நாட்களில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என AIMTC எச்சரித்துள்ளது.
கட்டண மாற்றியமைப்புடன், வணிக வாகன ஓட்டுநர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் மற்றும் செயலி அடிப்படையிலான போக்குவரத்து சேவைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து விவாதிக்க அரசுடன் முறையான சந்திப்பு நடத்த வேண்டும் எனவும் ஓட்டுநர்கள் சங்கம் கோரியுள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
டெல்லியில் பெட்ரோல் விலை 87 பைசா உயர்ந்து லிட்டர் ரூ.98.64 ஆகவும், டீசல் விலை 91 பைசா உயர்ந்து லிட்டர் ரூ.91.58 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது ஏற்கனவே உயர்ந்து வரும் இயக்கச் செலவுகளை எதிர்கொள்ளும் வணிக ஓட்டுநர்கள் மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b