Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 27 மே (ஹி.ச.)
தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனை, திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி கடுமையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவு, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அச்சட்டம் ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஸ்வநாதன் “ஆளுநரே பல்கலைக்கழக வேந்தராக நீடிக்கலாம்” என்று கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும், அது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரே பல்கலைக்கழக வேந்தராக தொடரலாம் என்று கூறுவது, பாஜகவுக்கு ஒத்து ஊதுவது போன்றதாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதா என்ற கேள்வி எழுகிறது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே தற்போது அதற்கு எதிராக பேசுவது, பதவி சுகத்திற்காக கொள்கை மாற்றம் செய்துள்ளதாக தோன்றுகிறது என்றும், இதனை திமுக சார்பில் கடுமையாக கண்டிப்பதாகவும் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P