Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 மே (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறை தவறானது என்றும், வழக்கை கையாண்டதில் உயர்நீதிமன்றம் பிழை செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. ஆன்லைன் சூதாட்டம் மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், குறிப்பாக இதனால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
மக்களின் நலன் மற்றும் சமூக தாக்கத்தை கருத்தில் கொண்டு, இதுபோன்ற சூதாட்ட விளையாட்டுகளை கட்டுப்படுத்தவும், நெறிமுறைப்படுத்தவும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லுபடியாகும் என உறுதி செய்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P