Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 28 மே (ஹி.ச.)
கோவை மருதமலை முருகன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட லிப்ட் வசதியின் அருகே, நூற்றுக் கணக்கான தேனீக்கள் தலையைச் சுற்றிச் சுற்றிக் கொடூரமாகக் கடித்த நிலையிலும், அதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல் பாறைத் தேனை ருசித்த கரடி ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஆகி வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் கொண்ட மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில், சமீபகாலமாக யானை, சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மருதமலை கோவிலுக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காகப் புதிதாகக் கட்டப்பட்ட லிப்ட் அமைப்பின் அருகில் உள்ள அடர்ந்த பாறை இடுக்குகளில், பிரம்மாண்டமான மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன.
அந்தப் பகுதியில் வந்த கரடி ஒன்று, தேன் கூட்டின் வாசனையை மோப்பம் பிடித்து, பாறைக்குழிக்குள் இருந்த தேனை அசுர வேகத்தில் ருசிக்க தொடங்கி உள்ளது.
தேன் கூட்டை கரடி கலைத்ததும் ஆத்திரம் அடைந்த நூற்றுக் கணக்கான தேனீக்கள், அந்தக் கரடியின் முகத்தையும், தலையையும் சுற்றிச் சுற்றி கொடூரமாகக் கொட்டி உள்ளன.
தேனீக்கள் கொட்டியதால் ஏற்பட்ட கடுமையான வலியிலும், அணுவளவும் பின்வாங்காத அந்த ‘கில்லாடி’ கரடி, தனது முரட்டுப் பாதங்களால் தேனீக்களைத் தட்டிவிட்டுக் கொண்டே, பாறைக்குழிக்குள் கையை விட்டுத் தேனை மிகவும் ‘குஷி’யாக ருசித்துப் பசியாறி உள்ளது.
தேனை முழுமையாகக் குடித்து முடித்த பின்னரே, அந்த கரடி மெதுவாகப் பாறை இடுக்கில் இருந்து இறங்கி, அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று உள்ளது.
மருதமலைக்கு வந்த பக்தர்கள் சிலர் தங்களின் மொபைல் போனில் பதிவு செய்த இந்தக் கரடியின் விசித்திரமான தேன் வேட்டை வீடியோ, தற்போது இணையத்தில் அனல் பறந்து வருகிறது.
கோவிலின் முக்கியப் பகுதியான லிப்ட் அருகிலேயே கரடி உலா வந்த சம்பவம், மருதமலைக்கு வரும் பக்தர்கள் இடையே ஒருபுறம் ஆச்சரியத்தையும், மறுபுறம் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளதால், அந்தப் பகுதியில் வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J