Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 06 மே (ஹி.ச.)
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் தவிர்க்க முடியாத இடம் பிடித்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
இத்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற காப்பு கட்டும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து 15 நாள்களுக்கு கோவிலில் தினமும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 11 ஆம் தேதி அம்மன் திருக்கல்யாணமும், 14 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
மே 15 ஆம் தேதி அம்மன் சிரசு திருவிழாவும், 16 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 17 ஆம் தேதி பூ பல்லக்கும், 22 ஆம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்துக்கு மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வலத் திருவிழா மே 15-ல் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள வசதியாக, சிரசு ஊர்வலத் திருவிழா நடைபெறும் நாளான வருகிற 15-ம் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b