Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 08 மே (ஹி.ச.)
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுமி கடந்த 2024 மார்ச் 2-ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.
2 நாட்களுக்குப்பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் சுற்றப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் புதுச்சேரியை உலுக்கியது. முத்தியால்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த காக்கா என்ற கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக 540 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.
இதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த 2024 செப்டம்பரில் கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து வழக்கு போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கருணாஸை குற்றவாளி என நீதிபதி கடந்த மாதம் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் இன்று தீர்ப்பு விவரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி சிறுமி பாலியல் கொலை வழக்கில் இளைஞர் கருணாஸ் @ காக்கா கருணாஸ் என்ற குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுமதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P