Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர் 13 ஜூன் (ஹி.ச.)
கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல், மைக்கை தட்டிவிட்டு அமைச்சர் ராஜு அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜு, தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக லாந்தை, கண்ணண்டை, கருங்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்ற அமைச்சர், லாந்தை குடியிருப்பு பகுதியில் பொதுமக்களிடம் உரையாற்றினார்.
நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டுச் செல்லும் போது, கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அப்போது, கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளரின் மைக்கை தட்டிவிட்ட அமைச்சர் ராஜு, உடனடியாக தனது காரில் ஏறி கண்ணாடியை மூடிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த சம்பவம் அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / GOKILA arumugam