மாயமான சாயிகிருஷ்ணா வழக்கு - குடும்பத்தினரை சந்தித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு
அமராவதி , 19 ஜூன் (ஹி.ச.) விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வாலிபர் சாயிகிருஷ்ணா மாயமான வழக்கில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் உயர்ம
A


அமராவதி , 19 ஜூன் (ஹி.ச.)

விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வாலிபர் சாயிகிருஷ்ணா மாயமான வழக்கில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றும் உறுதியளித்தார்.

விஜயவாடாவை சேர்ந்த காதே சாயிகிருஷ்ணா கடந்த மே 9-ந் தேதி முதல் மாயமாகியுள்ளார். ஒரு வழக்கு விசாரணை தொடர்பாக கிருஷ்ணலங்கா போலீசார் அவரை அழைத்துச் சென்ற பின்னரே அவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், இது போலீஸ் காவலில் நிகழ்ந்த மரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

ஆனால், சாயிகிருஷ்ணா மாயமாகியிருப்பதாகவும், அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாயிகிருஷ்ணாவின் தாய் விஜயலட்சுமி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளூர் எம்.எல்.ஏ. போடே பிரசாத்துடன் இணைந்து உண்டவல்லியில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தனர்.

அப்போது தங்களது வேதனையை எடுத்துரைத்து, உண்மை வெளிவர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

குடும்பத்தினரின் மனுவை கவனமாக கேட்ட முதல்வர், அரசு அனைத்து வகையிலும் அவர்களுக்கு துணை நிற்கும் என்றும், வழக்கில் எந்தவித பாரபட்சமும் இன்றி விசாரணை நடைபெறும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், சிங்கப்பூர் பயணத்திலிருந்து திரும்பியவுடன் துணை முதல்வர் பவன் கல்யாண், தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, விசாரணைக்காக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணலங்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகார்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சாயிகிருஷ்ணாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் மனுவை ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாயிகிருஷ்ணா மாயமான விவகாரம் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், உயர்மட்ட விசாரணையின் முடிவை பொதுமக்களும் குடும்பத்தினரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA