Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 ஜூன் (ஹி.ச)
காவிரி நடுவர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும், அதனைக் கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தனித்தீர்மானத்தை புதிய தமிழகம் கட்சியின் சார்பில் முழுமனதோடு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக நீடித்து வரும் மேகதாது பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த காவிரி நீர்ப் பிரச்சினை, காவிரி நடுவர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் முடிவுக்கு வந்த நிலையில், கர்நாடக அரசு தொடர்ந்து புதிய சிக்கல்களை உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
'மழை விட்டாலும் தூவானம் விடவில்லை' என்பதுபோல், காவிரி விவகாரத்தில் கர்நாடகம் தொடர்ந்து ஏதேனும் ஒரு பிரச்சினையை எழுப்பிக்கொண்டே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு புதிய தமிழகம் கட்சி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்வதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ