Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 ஜூன் (ஹி.ச.)
குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று முதல் ஜூன் 21 ஆம் தேதி வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக லடாக் சென்றுள்ளார்.
எல்லைப் பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் மத்திய அரசின் திட்டங்களின் செயலாக்கத்தை நேரில் ஆய்வு செய்வது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
பயணத்தின் இரண்டாம் நாளான நாளை, குடியரசு துணைத் தலைவர் பாங்காங் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள லுகுங் கிராமத்துக்குச் செல்கிறார். அங்கு மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
எல்லையோர கிராமங்களை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘துடிப்பான கிராமங்கள் திட்டம்’ கீழ் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் அவர் பார்வையிடுகிறார். சாலை வசதி, தொலைத்தொடர்பு, சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிகிறார்.
மேலும், லே நகரில் நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் குடியரசு துணைத் தலைவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
உயரமான மலைப்பகுதியில் நடைபெறும் இந்த யோகா நிகழ்வு, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் எல்லைப் பாதுகாப்பில் ராணுவ வீரர்களின் மன உறுதியையும் எடுத்துக்காட்டும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணத்தின் ஒரு பகுதியாக லேயில் உள்ள போர் நினைவிடத்திற்கும் செல்லும் துணைத் தலைவர், தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
லடாக் யூனியன் பிரதேச நிர்வாக அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
Hindusthan Samachar / vidya.b