Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஜூன் (ஹி.ச.)
கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் 5,432 மையங்களில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடைபெற்று, தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே தேசிய தேர்வு முகமை நாளை மறுதேர்வை நடத்துகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி மாநில அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள நீட் இளநிலை மறுதேர்வு எவ்வித குளறுபடிகளும் இன்றி சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமார், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் தேர்வு முறையாக நடத்தப்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேர்வு நடைமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக கண்காணித்து, மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதும் சூழலை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b