Enter your Email Address to subscribe to our newsletters

டொமினிகன் குடியரசு, 20 ஜூன் (ஹி.ச.)
தெளிந்த நீர் மற்றும் வெள்ளை மணல் கடற்கரைகளுக்குப் பெயர் பெற்ற டொமினிகன் குடியரசு, கரீபியன் பகுதியின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுமார் 56 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்துள்ளனர்.
டொமினிகன் குடியரசின் கடற்கரை சுற்றுலாத் தலமான பயாஹிபேயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், சுமார் 1,700 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
46 வயதான இத்தாலிய பெண் ஃபிரான்செஸ்கா வாலண்டினோ, விவா விண்டம் டொமினிகஸ் பீச் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததாக DAEH அவசர சேவை அமைப்பு அறிக்கையில் கூறியுள்ளது.
மூன்று பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் ஆறு பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாக DAEH தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களில் விருந்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் அடங்குவர்.
கரீபியன் கடற்கரையோரத்தில் கரும்புகை எழுவதையும், ஹோட்டலின் வைக்கோல் கூரை தீயில் எரிவதையும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட காணொளிகள் காட்டின.
பனை ஓலைகளால் ஆன கூரையின் சில பகுதிகள் எளிதில் தீப்பற்றக்கூடியவை என்பதாலும், காற்றின் நிலைமைகளாலும் தீ வேகமாக பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அந்நாட்டின் அவசரகால செயல்பாட்டு மையம் (COE) கூறியது.
உலகளவில் சுமார் 8,400 ஹோட்டல்களை உரிமையாகக் கொண்ட விண்டம் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனம், கருத்து கேட்டு அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான காரணங்கள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக செயல்பாட்டு மையம் தெரிவித்தது.
விருந்தினர்கள் அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டனர். அதே நிறுவனத்தைச் சேர்ந்த விவா விண்டம் டொமினிகஸ் பேலஸ் ஹோட்டலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
Hindusthan Samachar / vidya.b