Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 20 ஜூன் (ஹி.ச.)
மேற்கு வங்க தினம் எனப்படும் பச்சிம்பங்க திவஸ், மாநிலத்தின் அதிகாரப்பூர்வ உதய தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இது மாநிலத்தின் கலாச்சார அடையாளம், வரலாறு மற்றும் அதன் உருவாக்கத்திற்கு வழிவகுத்த சட்டமன்ற முடிவுகளை நினைவுகூர்கிறது.
ஜூன் 20 என்பது வரலாற்று ரீதியாக முக்கியமான நாளாகும். 1947-ஆம் ஆண்டு இதே நாளில், மவுண்ட்பேட்டன் திட்டத்தின்படி வங்காளத்தை பிரிப்பது குறித்து வங்காள சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்து பெரும்பான்மை பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள், பின்னர் மேற்கு வங்கமாக உருவான பகுதி, இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக பெருமளவில் வாக்களித்தனர்.
அதேசமயம், முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்த வங்காளத்திற்கோ அல்லது கிழக்கு பாகிஸ்தானுடன் (இன்றைய வங்கதேசம்) இணைவதற்கோ ஆதரவளித்தனர்.
அந்த வகையில் மேற்கு வங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை நினைவுகூர்ந்து, பச்சிம்பங்க திவஸ் எனப்படும் மேற்கு வங்க தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இன்று பிரதமர் மோடி கூறியுள்ளதாவது,
பச்சிம்பங்க திவஸை முன்னிட்டு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இலக்கியம், இசை, கலை, ஆன்மிகம், அறிவியல், வர்த்தகம், சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய வரலாற்றை ஆழமாக வடிவமைத்த மாநிலத்தை இந்த நாளின் வாயிலாக கொண்டாடுகிறோம்.
மேற்கு வங்கம் எண்ணற்ற வழிகளில் இந்தியாவின் தேசிய உணர்வை தொடர்ந்து வளப்படுத்தி வந்துள்ளது.
இன்று, ஜூன் 20, மேற்கு வங்கத்தின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாள். மேற்கு வங்கம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தொடர்வதை உறுதி செய்த நாள் இதுவே.
இந்த நிகழ்வுகளில் சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல் தலைவருமான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பங்கு விலைமதிப்பற்றது.
2026-ஆம் ஆண்டில் டாக்டர் முகர்ஜியின் 125-வது ஜெயந்தியையும் நாம் கொண்டாடுகிறோம்.
மக்களின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற மத்திய அரசு, மேற்கு வங்க அரசுடன் இணைந்து பணியாற்றும். மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்திற்காகவும், அதன் மக்களின் செழிப்புக்காகவும் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் தகவல்படி,
ஜூன் 20-21 தேதிகளில் பச்சிம்பங்க திவஸ் கொண்டாட்டங்கள் மற்றும் 12-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மேற்கு வங்கத்திற்கு வருகை தர உள்ளார்.
Hindusthan Samachar / vidya.b