ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்சவம் - செப்புத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூர், 24 ஜூன் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மூலவர் வடபத்ர சயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ரெங்க மன்னார் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்சவம் -  செப்புத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு


ஸ்ரீவில்லிபுத்தூர், 24 ஜூன் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மூலவர் வடபத்ர சயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ரெங்க மன்னார் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

இங்கு மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி பெரியாழ்வார் அவதார விழாவான திருஆனி சுவாதி உற்சவம் ஜூன் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி காலை பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. ஜூன் 24-ம் தேதி 9-ம் நாள் விழாவை முன்னிட்டு இன்று (ஜூன் 24) காலை 7 மணிக்கு பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் ’கோ ரதம்’ எனும் செப்புத் தேரில் எழுந்தருளினார்.

ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து நான்கு ரத வீதிகள் வழியாக தேர் இழுத்தனர். தேருக்கு முன்னால் வைணவ ஆச்சாரியர்கள் பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு பாசுரத்தை பாடியபடி ஊர்வலமாகச் சென்றனர்.

நாளை ஜூன் 25-ம் தேதி ஆனி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி, மங்களாசாசனம் நடைபெறுகிறது.

Hindusthan Samachar / vidya.b