Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச)
பள்ளிகளை மினி ஷூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றி அரசியல் செய்வது தான் தவெக-வின் கொள்கையா? என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
காஞ்சிபுரம் அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் அருகில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலமைச்சர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தியானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளில் ரீல்ஸ், அரசு நிகழ்ச்சிகளில் டான்ஸ், உச்சபட்சமாக பள்ளி மாணவர்களிடம் தவெக தலைவர் விஜய் சாங்ஸ் என கல்விக் கூடங்களை, அரசு நிகழ்ச்சிகளை ஒரு மினி ஷூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றி அரசியல் செய்வது தான் தவெக-வின் கொள்கையா?
பேட்டிகளில் திறமையாகப் பேசி மழுப்பும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் இது போன்ற செயல்களுக்கு என்ன பதில் கூறப் போகிறார்?
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல்தான் உள்ளது தவெக அரசின் செயல்பாடுகள்.
இன்னும் சற்று லோக்கலாக திரைப்பட வசன பாணியில் சொல்லப் போனால் “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” என்று கூறும் வகையில் கட்சி நிர்வாகிகளிடம் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்ட பிறகும் கூட தொடர்வது எந்த வகையில் நியாயம் தவெக தலைவர் திரு. விஜய் அவர்களே?
தொடர்ந்து பள்ளிச் சிறார்களை டார்கெட் வைத்து அரசியல் செய்யும் இந்த வழக்கத்தை விட்டொழிக்க தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையாக அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b