Enter your Email Address to subscribe to our newsletters

உண்டவல்லி , 27 ஜூன் (ஹி.ச.)
சிங்கப்பூர் கல்வி முறை குறித்து ஆய்வு பயணமாகச் சென்ற 37 சிறந்த ஆசிரியர்கள், ஆந்திரப் பிரதேச மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் நாரா லோகேஷ் அவரை உண்டவல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் சிங்கப்பூரில் தாங்கள் கண்டறிந்த கல்வி நடைமுறைகள் மற்றும் அவற்றை மாநிலத்தில் செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஆசிரியர்கள் விரிவாக முன்வைத்தனர்.
சிங்கப்பூர் கல்வி முறை மிகுந்த கட்டுப்பாடு, ஒழுங்கு மற்றும் திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்டதாக இருப்பதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவரும் அதிக பொறுப்புணர்வுடன் செயல்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் வாரந்தோறும் ஒன்றுகூடி பாடப்பிரிவுகளின் அடிப்படையில் விவாதிக்கும் நடைமுறை, பள்ளி மட்டத்தில் ஒருங்கிணைந்த கற்றல் முறை, மாணவர் நலனுக்காக “வெல்-நெஸ் அம்பாசிடர்கள்” மற்றும் மனநல ஆலோசகர்கள் நியமனம் போன்றவை அங்கு சிறப்பாக செயல்படுவதாகவும், இதை இங்கும் நடைமுறைப்படுத்தலாம் என்றும் கூறினர்.
மேலும், மாணவர்களின் திறமை அடிப்படையில் உயர்நிலைப் பள்ளிகளில் இடம் வழங்கும் முறை, “Future Focus Education” மூலம் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும் போது குறைந்தது ஒரு திறமையுடன் தயாராக இருப்பது போன்ற நடைமுறைகள் கல்வித் தரத்தை உயர்த்துவதாகவும் ஆசிரியர்கள் விளக்கினர்.
அதேபோல், ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 100 மணி நேர ஆன்லைன் பயிற்சி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப பயிற்சி, தொழிற்துறை அனுபவ வாய்ப்பு ஆகியவையும் அங்கு செயல்படுவதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் கருத்துகளை கவனமாகக் கேட்ட அமைச்சர் நாரா லோகேஷ், அவற்றை நடைமுறைப்படுத்த தனி செயல்முறை அமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.
இருப்பினும், மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் கல்வி சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கல்வி மாற்றங்கள் மாணவர் மையமாக இருக்க வேண்டும் என்றும், சிங்கப்பூர் நிலையை அடைய பல தசாப்தங்கள் எடுத்ததாகவும் அமைச்சர் கூறினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அதிக பொறுப்புடன் ஈடுபட்டால் மட்டுமே முழுமையான மாற்றம் சாத்தியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பு, மாநில கல்வி முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் முக்கியமான ஆலோசனையாக அமைந்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA